ஏழை என்றும் செல்வன் என்றும்
எங்கு பிறந்தனர் ?
வாழ வந்த மக்களுக்குள்
வருத்தம் ஏனடா ?
நல்ல மனத்தில் நச்சு கலந்து
நாச மாக்கினர் !
குள்ள நெஞ்சம் கொடுத்த வஞ்சம்
கூச வில்லையா ?
மாந்த நேயம் மறுக்கும் போது
மாசு சூழ்ந்திடும் !
வீழ்ந்த வாழ்வை மேன்மை யாக்க
விளக்கம் என்னடா ?
காட்டில் விலங்கு காண்ப தில்லை
சாதித் தொல்லையே !
நாட்டில் உள்ள நண்பர்க்குள் ஏன்
நலிவுச் சாதியே ?
பொதுமை வேண்டும் புதுமை வேண்டும்
மக்கள் நடுவிலே !
எதையும் சொந்தம் என்று சொல்லும்
இழிவைத் தள்ளுவோம் !
காற்றும் ஊற்றும் எனக்கும் உனக்கும்
சொந்த மல்லவா ?
நேற்றை மறப்போம் நாளை எண்ணி
நினைத்து வாழுவோம்.
கேசவன் கவிதைகள்
கேசவன் கவிதைகள்