மதுரையில் உள்ள ஒரு புத்தக கடைக்கு சென்றிருந்தேன். அந்த கடைக்கு இதற்க்கு முன்பு சென்றதில்லை. முதல் முறை என்பதினால் கடையை ஒரு முறை சுற்றி பார்த்தேன். என்ன புத்தகங்கள் இருக்கிறது, அதை எப்படி ஒழுங்கு படுத்தி வைத்துள்ளார்கள் மற்றும் கடையின் தோற்றம் என்று சுற்றி பார்த்த பின்பு புத்தகத்தை தேட ஆரம்பித்தேன். உண்மையை சொல்ல போனால் எந்த புத்தகத்தை வாங்குவதென்றே தெரியவில்லை. ஒழுங்குபடுத்தி வைத்திருந்த புத்தகத்தை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்து கொண்டு இருந்தேன். எனக்கு சிறிது அருகாமையில் ஒரு பொண்னும் புத்தகத்தை தேடி எடுத்து முன் பக்க முகவுரையை வாசித்து வாசித்து புத்தகத்தை தேர்ந்தெடுத்து கொண்டு இருந்தாள். சிறிது நேரம் அவள் எப்படி புத்தகத்தை தேடுகிறாள் என்று பார்த்தேன். மேற்கொண்டு பார்த்துகொண்டு இருந்தால் பார்க்கிறவர்களும் அந்த பொண்ணும் ஏதாவது நினைக்க கூடும் அதனால் அவள் எப்படி புத்தகம் தேர்ந்தெடுக்கிறாள் என்பதை ஆராய்வதை விட்டுவிட்டு வந்த வேலையை கவனிக்க தொடங்கினேன். நான் கூச்ச சுவாபம் கொண்டவன் என்பதால் அந்த பெண் எனது அருகாமையில் இருப்பதை விரும்ப வில்லை அதனால் அவள் என் கண்ணில் படாதவாரு ஒழுங்காக அடுக்கபட்டுயிருந்த புத்தக அலமாரிக்கு அடுத்த பக்கம் சென்று நின்று கொண்டேன். பின்பு அங்கே அடுக்கபட்டிருந்த புத்தகத்தை எடுத்து பார்த்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு புத்தகம் கண்களில் அகப்பட்டது. அது தோழர் தா. பாண்டியன் அவர்களால் எழுதபட்ட புத்தகம். தா. பாண்டியன் அவர்களின் பேச்சுக்களை சமுக வலையொலி பக்கத்தில் பார்த்திருக்கிறேன் ஆனால் அவர் எழுதின புத்தகத்தையோ கட்டுரைகளையோ வாசித்தது கிடையாது. அதனால் அப்பொழுதே அவருடைய புத்தகத்தை வாங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அவர் எழுதிய இரண்டு புத்தகத்தை வாசிக்க எடுத்து கொண்டேன். அதில் ஒன்று சே. குவாராவின் வரலாறு புத்தகம் மற்றொன்று பொதுவுடமையாரின் எதிர்காலம். இரண்டு புத்தகத்தின் எழுத்தும் அற்புதமாக இருந்தது. அந்த இரண்டு புத்தகத்தையும் எடுத்து கொண்டு ரசீது வாங்க விற்பனையாளரிடம் கொடுத்தேன். அவர் புத்தகத்தின் தலைப்பை பார்த்தவிட்டு மறு பார்வையை என் மீது வைத்தார். அந்த பார்வை நான் பொதுவுடமை சித்தாந்தத்தின் ஆள் என்பதாக நினைத்து பார்த்தது போல் இருந்தது. பின்பு புத்தகத்திற்க்கு ரசீது போட்டுகொண்டே எனது ஊர் அரசியல் நிலவரத்தை விசாரித்தார். அது பாராளுமன்ற தேர்தல் காலம் என்பதால் அந்த அம்மையார் அக்கேள்வியை கேட்டாள். நான் மறு மொழியாக அதை நான் கவனிப்பதில்லை என்று பதில் கொடுத்தேன். அதற்க்குள் ரசீது போடபட்டு எனது கையில் இருந்த பணத்தை வாங்கிகொண்டு புத்தகத்தை கையில் கொடுத்தார். கொடுக்கும் போது தம்பி இந்த கட்சிக்கு ஒட்டு போடாதிங்க என்று சிரித்து கொண்டே ஒரு குறிப்பிட்ட கட்சி பெயரை சொன்னார். அந்த அம்மையார் சொன்ன கட்சி எனக்கு தனிபட்ட முறையில் பற்றும் விருப்பமும் இல்லை என்றாலும் அந்த நேரத்தில் எதுவும் தெரியாதவன் போல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன். நான் வாங்கின புத்தகத்தை பார்த்து விட்டு அவர் என்னை பொதுவுடமை சித்தாந்தத்தில் ஈடுபாடு உள்ளவன் என்று எண்ணியிருக்க கூடும் என்று நினைக்கிறேன். தொடர்ந்து அந்த அம்மையார் பேசும் போது இதை தான் உணரமுடிந்தது.
தா. பாண்டியன் அவர்கள் எழுதின புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அந்த புத்தகத்தை வாங்கினேன், கடையில என்னை பொதுவுடமை காரன் என்று நினைச்சிட்டாங்க.
எழுத்து: ர கிசோர் கவி